×

ஆருத்ரா கோல்டு டிரேடிங் மோசடி: ரூ.15 கோடி வாங்கிய நடிகர் ஆர்.கே.சுரேஷ்

சென்னை: ஆருத்ரா கோல்டு டிரேடிங் மோசடி விவகாரத்தில் நடிகர் ஆர்.கே.சுரேஷ், ரூ.15 கோடி வாங்கியது அம்பலமாகியுள்ளது. சென்னையை தலைமையகமாக கொண்டு திருவள்ளூர், திருவண்ணாமலை, ஆரணி, செய்யாறு, கோவை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆருத்ரா கோல்டு டிரேடிங் என்ற நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்நிறுவனம், தங்களிடம் ஒரு லட்சம் முதலீடு செய்தால் மாதம் ரூ.36 ஆயிரம் வட்டி வழங்கப்படும் என்று விளம்பரம் செய்தது. இதை உண்மை என்று நம்பி தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சம் பேர் இந்த நிதிநிறுவனத்தில் ரூ.2,438 கோடி முதலீடு செய்தனர். ஆனால், சொன்னபடி வட்டி, அசல் ஆகியவற்றை நிறுவனம் தரவில்லை.

இது தொடர்பாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். இதை தொடர்ந்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் நிதி நிறுவனத்தில் ஒரு லட்சத்து 9,259 பேரிடம் மொத்தம் ரூ.2,438 கோடி முதலீடு பெற்று மோசடி செய்தது தெரியவந்தது. இதில் முக்கிய குற்றவாளிகளான நிறுவனர் ராஜசேகர், உஷா, மைக்கேல் ராஜ் ஆகியோர் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுவிட்டனர். அவர்களுக்கு ரெட் கார்னர் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் பாஸ்கர், மோகன்பாபு, செந்தில்குமார், நாகராஜன், பேச்சிமுத்துராஜா, நடிகர் ரூசோ ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த மோசடியில் திரைப்பட நடிகர், தயாரிப்பாளர் மற்றும் தமிழக பாஜ ஓ.பி.சி. பிரிவு துணை தலைவர் ஆர்.கே.சுரேசுக்கும், பாஜ நிர்வாகி ஹரீஷுக்கும் தொடர்புள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் ஆருத்ரா கோல்டு டிரேடிங் மோசடி விவகாரத்தில் நடிகர் ஆர்.கே.சுரேஷ், ரூ.15 கோடி வாங்கியது அம்பலமாகியுள்ளது. ஏற்கனவே ரூ.5 கோடி வாங்கியதாக தெரியவந்த நிலையில் விசாரணையில் ரூ.15 கோடி என்பது உறுதியானது. ஆருத்ரா கோல்டு டிரேடிங் விவகாரத்தில் 500 முகவர்களுக்கு சம்மன் அனுப்ப பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர். 500 முகவர்கள் மூலம் ரூ.800 கோடி வசூல் செய்யப்பட்டிருப்பதாக விசாரணையில் அம்பலம் செய்துள்ளார்.

ஆருத்ரா கோல்டு மோசடி விவகாரம் தொடர்பாக ஜூன் 20-ம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை தொடர்பான ஆவணங்கள், ஆதாரங்கள் இன்று நீதிமன்றத்தில் சமர்பிக்கப்படும். வருவாய் துறை அதிகாரிகளிடம் பொதுமக்கள் கொடுத்த 1 லட்சம் புகார்கள் குறித்து இனி விசாரணை தொடங்கும்.

The post ஆருத்ரா கோல்டு டிரேடிங் மோசடி: ரூ.15 கோடி வாங்கிய நடிகர் ஆர்.கே.சுரேஷ் appeared first on Dinakaran.

Tags : RK Suresh ,Chennai ,Arudra ,Dinakaran ,
× RELATED ஆருத்ரா மோசடி: திருவள்ளூர் கிளை இயக்குனரின் ஜாமின் மனு தள்ளுபடி